பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்திற்கு மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புக்களும் ஆதரவு வழங்கியுள்ளன.
ஹட்டன் மல்லியப்பு சந்தியில் நடைபெற்று வரும் குறித்த போராட்டத்தில் இன்றைய தினம் அந்த அமைப்புக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளன.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு பட்டியை தலையில் அணிந்து பதாதைகளை ஏந்தி கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அதனை தொழிலாளர்கள் சார்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் அரசாங்கம் உறுதியளித்தப்படி தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை நாள் வேதனத்தினை ஆயிரம் ரூபாவாக பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அதனை இழுத்தடிப்பு செய்வதற்கு இடமளிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இம்மாதம் முடிவதற்குள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும், அப்படி இது இழுத்தடிப்பு செய்யும் பட்சத்தில் கடந்த காலங்களை போல் ஏமாற்றம் செய்யாது குறிப்பிட்ட காலத்திற்கான நிலுவை பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும், மலையகத்தில் உள்ள ஏனைய பல்வேறு இடங்களிலும் இந்த போராட்டத்தினை விஸ்தரிக்கவுள்ளதாகவும் மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.