எம்.சி.சி. ஒப்பந்த உள்ளடக்கம் அரசியலமைப்புக்கு முரணானது – சட்டமா அதிபர்

v
v

ஐக்கிய அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்படவிருந்த எம்.சி.சி. ஒப்பந்தம் மற்றும் அதனுடன் இணைந்ததான உடன்படிக்கைகள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணான உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதாக சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா, ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையின் சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணாக உள்ள குறித்த ஒப்பந்தத்தை அவ்வாறே கைச்சாத்திட்டு அமுல்படுத்த முனைந்தால், அது பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என குறித்த ஆலோசனையில் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன ஒரு பிரபல பத்திரிக்கையிடம் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

சட்ட மா அதிபர், எம்.சி.சி. ஒப்பந்தம் மற்றும்  அதனுடன் இணைந்த உடன்படிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலருக்கு விஷேட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.   

குறித்த ஒப்பந்தத்துடன் தொடர்புபட்ட அரச நிறுவனம் மற்றும் அமைச்சு வழங்கியிருந்த மேற்பார்வைகள்,  பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள்,  எம்.சி.சி. ஒபந்தம் மற்றும் அதனுடன் இணைந்த உடன்படிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் நிபந்தனைகளும், இதன்போது அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டன. 

இதனைவிட வெளிநாட்டு  சொத்துக்கள் குறித்த திணைக்களம், வெளிவிவகார அமைச்சு  ஆகியவற்றின் அனைத்து அவதானிப்புக்களையும் கவனத்தில் கொண்டு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 20 பக்கங்களைக் கொண்ட விரிவான ஆலோசனைகள் இதன்போது ஜனாதிபதி செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அதன்படி,  எம்.சி.சி. ஒப்பந்தம் மற்றும் அதனுடன் இணைந்ததான  உடன்படிக்கைகள், இலங்கை சட்டத்துக்கும், அரசியலமைப்புக்கும்  பொருத்தமற்றது எனவும், அது அவற்றுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி குறித்த ஒப்பந்தத்தை செயற்படுத்த முற்பட்டால், சட்ட ரீதியாக பல தடைகள் உள்ளதாகவும்  அந்த ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  என்றார்.