நல்லாட்சி அரசில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகள் விரைவில் வெளிவரவுள்ளது. அதேவேளை, ஊழல் ஒழிப்புக் குழுவின் மோசடிகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. நல்லாட்சி அரசின் ஊழல், ஒழிப்புக் குழுவின் 22 உறுப்பினர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரைகளை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமையும்.என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் வழக்குத் தொடர சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணைகள் துரிதப்படுத்தப்படவுள்ளன.
அதேபோன்று, 2015 – 2019ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் கண்காணிப்புகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது – என்றார்.
நல்லாட்சி அரசின் ஊழல், ஒழிப்புக் குழுவில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், அனுரகுமார உட்பட 22 பேர் அங்கத்தவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.