வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனையிலேயே 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 3 பேர் மன்னார் நானாட்டானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
மன்னார் வைத்தியசாலையில் ஊழியர் ஒருவரும் அங்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.