கொவிட்-19 வைரஸ் பரவலில் முன்னிலையிலிருந்து செயற்படும் இராணுவ வீரர்களுக்கு வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரசெனேகா தடுப்பூசிகள் இராணுவ வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்காக 31 000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
பலாலி, அநுராதபுரம், மன்னார், வவுனியா, மின்னேரியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கொழும்பு, தியத்தலாவை ஆகிய இராணுவ வைத்தியசாலைகளுக்கும் , அம்பாறையிலுள்ள இராணுவ கம்பெட் பயிற்சிவிப்புக் கல்லூரி, பனாகொடை முதலாவது இலங்கை இராணுவ வைத்திய படையணி, 11 ஆவது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம், 22 ஆவது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம், 61 ஆவது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம் ஆகியவற்றுக்கும் தலா 500 வீதம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவிருந்த படையினருடன் கலந்துரையாடினார்.
இராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்ட 31,000 தடுப்பூசிகளை ஜனவரி 30 ஆம் திகதியிலிருந்து 3 நாட்களுக்குள் வழங்கி நிறைவு செய்ய இராணுவ வைத்தியக் குழு எதிர்பார்த்துள்ளது.
நாராஹேன்பிடவில் உள்ள கொழும்பு இராணுவ மருத்துவமனை, பனாகொடையிலுள்ள இராணுவ மருத்துவமனைகளின் இராணுவ மருத்துவ குழுவினரால் கொவிட்-19 தடுப்பு போராட்டத்திலுள்ள 1000 வீரர்களுக்கு கடந்த வெள்ளியன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டன