வேலணை பிரதேச செயலக வாயிலை மூடி போராட்டம்

download 2
download 2

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பிரதேச மக்கள் இன்று (1) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என எச்சரித்ததால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.

வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனுக்கு வவுனியா – வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளராக இடமாற்றம் வழங்கப்பட்டது. அப்பிரதேச பிரதேச செயலாளர் எஸ்.சிவகரன், வேலணை பிரதேச செயலாளராக மாற்றப்பட்டார்.

இந்நிலையில் புதிய பிரதேச செயலாளர் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில், மக்கள் பிரதேச செயலக வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை அறிந்த காவல்துறையினர், இன்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்வோம் எனவும் கலைந்து செல்லுமாறும் தெரிவித்தனர்.

அதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. அத்துடன் புதிய பிரதேச செயலாளரை கடமையேற்கவைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.