வீடுடைத்து தங்கநகைகளை கொள்ளையிட்ட நபர் கைது!

Tamil News large 2267989
Tamil News large 2267989

யாழ்ப்பாண ஆறுகால்மடம் பழம் வீதியில் உள்ள வீடுடைத்து 41 பவுண் தங்க நகைகளை திருடிய திருடன் 3 மணித்தியாலத்தில் நகரிலுள்ள நகைக்கடைகள் தொகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 7 மணியளவில் பாடசாலைக்கு பிள்ளையை விடச் சென்று திரும்பிய போது, வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டிருந்தன.

அதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பா​ண காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அதுதொடர்பில் தகவலைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான அணியினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போது சந்தேக நபர் நகைகளை விற்பனை செய்ய யாழ்ப்பாண கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடைகளில் நடமாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற காவல்துறையினர் சந்தேக நபரைக் கைது செய்தனர். சந்தேக நபரிடமிருந்து 41 பவுண் தங்க நகைகளும் 2 கிராம் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றினர்.

யாழ்ப்பாண பொம்மைவெளியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண காவல்துறை நிலையத்தில் முற்படுத்தப்பட்டார் என்று மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நாளை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் காவல்துறையினர் கூறினர்.