சுன்னாகம் காவல்துறையினர் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பம் ஒத்திவைப்பு!

954540540courts judje new l 1 1
954540540courts judje new l 1 1

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்குத் தடை கோரி சுன்னாகம் காவல்துறையினர் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்துக்கு சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைக் கோரி நாளைமறுதினம் வரை ஒத்திவைத்தது மல்லாகம் நீதிவான் நீதிமன்றம்.

அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை காவல்துறையினர் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தவணையிட்டது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பம் சுன்னாகம் காவல்துறையினரால் இன்று பிற்பகல் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராசா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

போராட்டங்கள் நடத்தப்படுவதால் கொரோனா சுகாதார நடைமுறைகள் மீறப்படுகின்றனவா? என்பது தொடர்பில் சுன்னாகம் காவல்துறை பிரிவுக்கு போறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெற்று நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை காவல்துறையினர் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தவணையிட்டது.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் இன்று காலை பொத்துவிலில் ஆரம்பமாகி காவல்துறையினரின் தடையை மீறி நடைபெற்றுவருகிறது. வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.