தமிழக மீனவர்கள் நால்வர் கொலை: ஏற்றுக்கொள்ளவே முடியாது! – இலங்கை மீது இந்தியா பாய்ச்சல்

Subrahmanyam Jaishankar 700x380 1
Subrahmanyam Jaishankar 700x380 1

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நால்வர் கொலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்  பிரச்சினைகள் தொடர்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ராஜ்யசபா அமர்வின்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர்,தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கொலை செய்யப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை என்றும்  சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார்.

இதேவேளை, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதால் மீன்பிடித் தொழிலையே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குறிப்பிட்டார்.

அதேபோல் அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களைத் தாக்குவது இலங்கை இராணுவத்தின் வழக்கமான நடவடிக்கையாக இருந்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டினார்.

இதன்போது, தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்ட தகவலை அறிந்ததுமே மேல் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு உடனடியாக எடுத்தது. இந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியிட்டதன் பின் சபையில் விவாதம் முடிவுக்கு வந்தது.