நீர்பாசன திட்டங்களை ஏற்படுத்தி விளைநிலங்ககளை அதிகரிக்கும் பல்வேறு செயற்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார்.
வவுனியாவிற்கு நேற்று (06) விஜயம் செய்த அவர் குளம் புனரமைப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாட்டின் தேசிய உற்பத்திக்கு ஊக்கமளிக்கின்ற சிந்தனையின் வெளிப்பாடாக இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. ஒருகாலத்தில் அரிசி உற்பத்தியில் தண்ணிறைவு கண்ட நாடு இது. இதற்கு முதல் அரிசியை பெருமளவில் இறக்குமதி செய்திருந்த நிலமையையும் நாம் கண்டிருக்கிறோம்.
அந்தவகையில் விவசாயப்புரட்சி ஒன்றை ஏற்ப்படுத்த வேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமே இது. தற்போது மாகாண விவசாய திணைக்களத்திலே ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு எமக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதனை செய்துவருகிறோம். இதன் மூலம் விவசாய திணைக்களத்தின் சேவைகள் மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதேவேளை விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக பலநோக்கு கூட்டுறவு சங்கங்களிற்கு 20 மில்லியன் ரூபாயை விடுவித்துள்ளேன். அத்துடன் மேலும் நெல்லினை கொள்வனவு செய்வதற்காக 4 வீத வட்டியிலே பணத்தினை விடுவிப்பதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய ராஜாங்க அமைச்சர் வடக்கிலே அதனை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நீர்பாசனம் மட்டுமல்லாமால் விவசாயம், விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மாகாண நிர்வாகமும் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடாத்திக்கொண்டிருக்கிறோம். மேலதிகமாக நீர்தேக்க திட்டங்களை அமைப்பதற்கும் அதனூடாக குடிநீர் வழங்குதல் மற்றும் விளைநிலங்களை அதிகரிப்பதற்குமான செயற்திட்டங்களையும் மத்திய அரசும் மாகாணசபையும் இணைந்து முன்னெடுக்க இருக்கின்றன. எனவே இவற்றை முழுமையாக பயனபடுத்தி அதன் பயனை அடையவேண்டும் . இதற்கு மாகாண நிர்வாகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.