மன்னாரில் அழிந்து வரும் சித்த மருத்துவத்துறைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

DSC 0074
DSC 0074

ஆங்கில மருத்துவம் உலகம் முழுவதும் வியாபித்தாலும் எங்கோ ஒரு மூலையிலாவது தமிழ் மருத்துவமும் சித்த மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அவர்களையும் அவர்களின் மருத்துவ முறையையும் ஆங்கில மருந்துகளும் மருத்துவ முறைகளும் மறக்க செய்தாலும் நவீன மருத்துவ முறைகளே கைவிட்ட சில நோய்களுக்கு சித்த மருத்துவம் இன்றும் குணமளிக்கத்தான் செய்கின்றது.

மன்னார் காத்தான் குளப்பகுதியில் தான் பரம்பரியமாக கற்று தேர்ந்த சித்த மருத்துவ துறைய பாதுகாத்து இன்றும் வைத்திய சாலைகளால் குணப்படுத்த முடியாமல் போன பல விதமான எலும் முறிவுகள் , தறிவு நோவுகள் உடைவுகளை சுகப்படுத்தி வருகின்றார் பறுனாந்து அன்ரனி அவர்கள்.

இயற்கையான மூலிகைகள் மற்றும் அழிவின் விழிப்பில் உள்ள மூலிகைகளை பாதுகாப்பதுடன் அவ்வாறான மூலிகைகளை பயன்படுத்தி இயற்கையான முறையில் பதப்படுத்தி மருந்துகளை தயாரித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார் அன்ரனி.

மக்களின் நிலைக்கு ஏற்ப குறைந்த கட்டணங்களுக்கு சிகிச்சை அளிப்பதாலும் இயற்கையான முறையில் சிகிச்சை மேற்கொள்வதாலும் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அன்ரனி அவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக மக்கள் வருகின்றனர்.

இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்ததின் போது பல்வேறு இழப்புக்களை சந்தித்த அன்ரனி தன்னுடைய தாயையும் தான் பாரம்பரியமாக கற்று வந்த மருத்துவ குறிப்புக்கள் ஏடுகள் புத்தகங்களை கூட காப்பாற்ற முடியாத நிலையில் இடப்பெயர்வை சந்தித்துள்ளார்.

அதன் பின்னர் 2010 ஆம். ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் ஆயுள் வேத பாதுகாப்பு சபையினால் நடத்தப்பட்ட பயிற்சியினை நிறைவு செய்து தற்போது வரை ஆயுள் வேத சிகிச்சை நிலையத்தை நடாத்தி வருவதுடன் இலங்கையில் உள்ள மூலிகை தோட்டங்களில் ஆயுள்வேதம் கற்கின்ற மாணவர்களுக்கு மூலிகை தொடர்பாக விரிவுரைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

இவருடைய சேவையை பாராட்டி இவருக்கு ‘தேச கீர்த்தி’ விருதும் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இவை எல்லாம் கடந்து நவீன மருத்துவ முறை காரணமாகவும் குடியேற்ற பிரச்சினைகள் காரணமாக அதிகளவான மூலிகை இனங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும் ஆயுள் வேத மருத்துவர்களும் அவர்களுடைய மருத்துவ முறைகளும் அழிவு நிலையில் உள்ளதாக அன்ரனி கவலை வெளியிடுகின்றார்.

எனவே அனைவரும் மூலிகைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் எனவும் சித்த மருத்துவ துறையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் மூலிகைகள் தொடர்பாக பிள்ளைகளுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் வைத்திய சாலைகளை தவிர ஏனய இடங்களில் கதிர் வீச்சு இயந்திரம் இல்லாமையால் வேறு மாவட்டங்களில் இருந்து கதிர்வீச்சு அறிக்கைகளை பெற்று மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அதே நேரத்தில் ஆங்கில மருத்துவ முறை காரணமாக சித்த மருத்துவ முறை அழிவுப்பாதையில் செல்வதனால் அவற்றை பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் பறுனாந்து அன்ரனி கோரிக்கை விடுத்துள்ளார்.