அரசியல் யாப்பினூடாக தேசிய பிரச்சினைக்கு துரித தீர்வு!!

IMG 6250
IMG 6250

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டேபிளில் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இருவரிற்குமிடையிலான கலந்துரையாடலின் போது தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய இரா.சம்பந்தன் அவர்கள் அவற்றை அரசியல் யாப்பொன்றின் மூலமாக அடைவதே எமது நோக்கமாகும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச அவர்கள் 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன்
கலந்துரையாட தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது தாம் ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் ஜனநாயக பண்புகளிற்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களிற்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல் தொடர்பில் உள்நாட்டிலே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியமையினாலேயே சர்வதேச மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கிய காரணமெனவும் இவற்றிலிருந்து பின்வாங்குவதானது, இலங்கைஅரசாங்கமானது உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டும் என்பதனை வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை தமது அரசாங்கம் கொண்டிருக்கும் என்பதனை மீளுறுதி செய்த அமெரிக்க தூதுவர் அவர்கள் அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.