வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளைப் பாதுகாத்தல் என்பன தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான சில அமைச்சரவை பத்திரங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் நுகர்வோருக்கு பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டம், சில வாரங்களின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
கொரோனா பரவல் அபாயம் காரணமாக கடந்த சில வாரங்களாக அமைச்சரவை கூட்டங்கள், இணையவழி மெய்நிகர் சந்திப்பின் ஊடாக இடம்பெற்றன.
இதேநேரம், கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, நேற்றையதினம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட இருந்த நிலையில், அதனை அடுத்த வாரம் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்பட்டுள்ள அவசியத்தன்மை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.