வெட்டப்படாத மரங்கள்; இருளில் மிதக்கும் காஞ்சூர மோட்டை

kansooramoddai 18
kansooramoddai 18

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சூர மோட்டை கிராமத்திற்கு மின்சாரத்தை கொண்டுசெல்வதற்காக பிரதேசசபையின்  வீதிக்கரைகளில் உள்ள 12 மரங்களை அகற்றுவதற்கு 4 இலட்சம் ரூபாயை வனவளத்திணைக்களம் கோரியிருந்தது. எனினும் மூன்று மாதங்கள் கடக்கின்ற நிலையிலும் குறித்த மரங்கள் இன்னும் அகற்றப்படாத நிலையில் உள்ளது.

குறித்த கிராமத்தில் கடந்த 2012 இல் குடியேறிய மக்கள் தமக்கு வனவளத்திணைக்களத்தால் பல்வேறு அட்டூழியங்கள் இடம்பெற்றுவருவதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமது கிராமத்திற்கு அருகில் உள்ள மருதோடையில் இருந்து ஒன்றரைகிலோமீற்றர் தொலைவில் உள்ள காஞ்சூர மோட்டைக்கு மின்சாரத்தை கொண்டுவருவதற்கான மின்கம்பத்தை பதிப்பதற்கு 12 மரங்கள் தடையாக உள்ளது. இதனை அகற்றுவதற்கான அனுமதியை வனவளதிணைக்களம் வழங்காமல் நீண்டகாலமாக தடைஏற்படுத்தி வந்தது. 

இது தொடர்பாக குறித்த மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்ததுடன் பல்வேறு அரசியல்வாதிகளிடமும் தமது பிரச்சனையை எடுத்துக்கூறியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் குறித்த மரங்களை அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்காக வனவளத்திணைக்களம் 4 இலட்சம் ரூபாயை மரங்களின் மீள்நடுகைக்காக கோருவதாக கடந்த வருடம் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

வன்னியில் சிங்கள குடியேற்றம் மற்றும் கிரவல் அகழ்வு செயற்பாடுகளிற்காக ஆயிரக் கணக்கிலான ஏக்கர் காடுகள் எந்த வித அனுமதியும் இன்றி அரசினாலும், தனிநபர்களாலும் அழிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழர்களின் பூர்விக கிராமமான காஞ்சூரமோட்டைக்கு மின்சார இணைப்பினை பெறுவதற்காக 12 மரங்களை அகற்றுவதற்கு வனவளத்திணைக்களம் நான்கு இலட்சத்தை கோரியமை தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோர் கடும் விசனம் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறித்த நிதியினை ஏதோ ஒருவகையில் செலுத்தியோ அல்லது மரக்கூட்டுத்தாபனம் ஊடாகவோ அந்த மரங்களை வெட்டுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் அன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.எனினும் குறித்த கூட்டம் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடக்கின்ற நிலையிலும் அந்த மரங்களை வெட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளும் உரிய திணைக்களங்களால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இதனால் குறித்த கிராம மக்களிற்கான மின்சாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.