வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிய தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று (22) மரணமடைந்தார். அவருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அவரது உருவபடத்திற்கு ஒளி தீபம் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி என்ற தாயே மரணமடைந்திருந்ததுடன் அவரது மகனான தருமகுலநாதன் கடந்த 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
அவரைத்தேடி வவுனியாவில் 1465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.