விசேட தேவையுடையோருக்கான தையல் நிலையம் திறந்து வைப்பு!

01 16 1
01 16 1

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் விசேட தேவையுடையோருக்கான  இளநிலா தையல் நிலையம் கறுவாக்கேணியில் திறந்து வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமூகசேவை உத்தியோகத்தர் டி.மலேஸ்வரன், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், கறுவாக்கேணி கிராமசேவை அதிகாரி அ.பிரபு, கறுவாக்கேணி மாதர் சங்கதலைவி, முன்பள்ளி ஆசிரியர், சமூக நிலைய உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தையல் இயந்திரங்களும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் அதனோடு இணைந்த பொருட்களும் வழங்கப்பட்டு விசேட தேவையுடையோருக்கான  தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது

வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் மாற்றுத்திறனாளி ஒருவரின் மருத்துவ செலவுக்காக மூப்பதாயிரம் ரூபாவும், சுயதொழில் உதவிக்காக ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சியினை மேற்கொண்ட பெண்களுக்கு தையல் இந் நிலயத்தின் மூலம் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருமானத்தினை அதிகரித்து சொந்தகாலில் நிற்க கூடிய வகையில் வேலைத்திட்டம் இடம் பெற்றதாக சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.