வவுனியா இலுப்பையடி பகுதியில் இன்றையதினம் காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்
இலுப்பையடிப்பகுதியில் நின்றிருந்த முதியவர் வீதியை கடக்கமுற்பட்ட போது பூந்தோட்டம் பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வீதியை கடக்கமுற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் வயது 56 என்ற முதியவரே மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.