வவுனியா நகர் பகுதியில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்று முன் தினம் இரவு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் மற்றும் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதாவது நேற்று முன் தினம் (02) பிற்பகல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் தொலைபேசியினை வவுனியாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார்.
வவுனியாவில் குறித்த நடத்துனர் உரிய நபரிடம் தொலைபேசியினை வழங்கிய பின்னர் மற்றுமொரு பெண் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று நடத்துனரிடம் தொலைபேசியினை கேட்டபோது தொலைபேசியினை அவர் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
அதன் போது அப்பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் வந்த சில நபர்கள் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். காயமடைந்த நடத்துனர் , சாரதி வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தனர்.
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து தாக்குதல் நடத்திய நபர்கள் தொடர்பில் சி.சி.டிவியின் உதவியுடன் வவுனியா காவற்துறையினரை நேற்று (03) மாலை 43வயது மதிக்கத்தக்க தேக்கவத்தையில் வசிக்கும் ஒருவரை கைது செய்ததுடன் அவரது முச்சக்கர வண்டியையும் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றிருந்தார்கள்.
மேலதிக விசாரணைகளை வவுனியா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.