அடுத்த தேர்தலில் கோட்டாபய களமிறங்கப்போவதில்லை

download 13
download 13

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்திருப்பதாக அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை அழுத்தமாக தெரிவித்திருக்கின்றார் என ஜனாதிபதி செயலக வட்டாரத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு அமைவாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதோடு, அந்நபருக்கு தன் சார்பான சிங்கள பௌத்த மக்களும் வாக்களிக்கும் நிலைமை உருவாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் பஸில் ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கும் வகையில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவையே போட்டியிடச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த அறிவிப்பானது விமல் அணிக்குப் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனகட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி கோட்டாபயவிற்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் விமல் தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையாக வெடித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதற்கிடையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டாவது தடவையாகப் போட்டியிடமாட்டார் எனவும் எனவே, அவர் தனது பதவிக் காலம் முழுவதையும் அனுபவிப்பார் என்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்திருக்கிறார்.

கோட்டாபயவை அடுத்து பஸில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் வேட்பாளராகவும் களமிறங்குவார்கள் என்றும், பஸில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என நாம் நம்புகின்றோம் என்றும் அவர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.