கொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

dead 1
dead 1

கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திம்புள்ள – பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு, கொட்டகலை நகரில் பிரதான வீதியை கடக்க முயற்சித்த நபரொருவர் மீது, லொறியொன்று மோதியுள்ள நிலையிலேயே, இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் கொட்டகலை- வூட்டன் பகுதியைச் சேர்ந்த 78 வயதான ராமசாமி ராஜலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஹற்றன் திசையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறியொன்று, கொட்டகலை வூட்டன் பகுதியில் வீதியை கடக்க முயற்சித்த முதியவர் மீது மோதியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி, சம்பவ இடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ள நிலையில், பிரதேச மக்கள் லொறியை பின் தொடர்ந்துள்ளனர்.

இதன்போது, குறித்த லொறியை பத்தனை சந்திப்பில் நிறுத்துவதற்கு முயற்சித்த வேளையில் லொறியின் சாரதி, லொறியை மீண்டும் ஹற்றன் நோக்கி செலுத்தியுள்ளதாக காவல்துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் லொறியின் சாரதி, லொறியை கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த விபத்து, கொட்டகலை நகரின் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த லொறியை, சில தரப்பினர் சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி, திம்புள்ள – பத்தனை காவல்துறை நிலையத்தில் பின்னர் சரணடைந்துள்ளதுடன், அவரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.