பின்னணியை அறியாமல் பெண்கள் விமர்சிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது-ஹிருணிகா

hirunika
hirunika

பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் அல்லது அவர்களால் விடப்படும் தவறுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றமை கவலைக்குரியது. இவ்வாறான சம்பவங்களில் பின்னணியை அறியாமல் பெண்கள் விமர்சிக்கப்படுவது முற்போக்கான செயற்பாடு அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அத்தோடு கொடூரமான சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன. பயணப்பொதிக்குள் சடலமாக பெண்னொருவர் மீட்க்கப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கொண்டு நகைச்சுவை விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இவ்வாறு செயற்படுவது மிகவும் மோசமானதொரு விடயமாகும்.

இந்தியாவில் மருத்துவபீட மாணவியொருவர் பஸ்ஸில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். எனினும் அவரது தனிப்பட்ட விபரங்கள் உள்ளிட்டவற்றை அந்நாட்டு அரசாங்கம் பாதுகாத்தது. அவருடைய புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. ஆனால் இலங்கையில் தலையற்ற குறித்த பெண்ணின் சடலம் எனக் கூறப்படும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவாக பகிரப்படுகிறது. இவ்வாறு புகைப்படத்தை பகிரும் ஒவ்வொருவரும் தமது குடும்பத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றால் என்னாவாகும் என்று சிந்தித்து முற்போக்காக செயற்பட வேண்டும்.

இதே போன்று கடந்த வாரம் 9 மாத குழந்தையொன்றை இளம் தாயொருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இது கவலைக்குரிய விடயமாகும். எவ்வாறிருப்பினும் பெரும்பாலான பெண்கள் குழந்தை பிரசவித்த பின்னர் சுமார் 3 மாத காலத்திற்கு மன உளைச்சலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். அவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த தாய் குழந்தையை தாக்கியுள்ளார். எனவே இது போன்ற சம்பவங்கள் பதிவாகும் போது அவர்களை விமர்சிக்காது, அவர்கள் தொடர்பில் கணிப்பிட்டு கருத்துக்களை வெளியிடாது பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் வடக்கில் தாயொருவர் வறுமையின் காரணமாக தன் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அரசாங்கத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையே இவ்வாறான சம்பவங்கள் பதிவாகக் காரணமாகும். வெகு விரைவில் இலங்கை ஆஜன்டினா உள்ளிட்ட நாடுகளைப் போன்றதாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.