டிக்கோயாவில் மினி சூறாவளி! 23 குடியிருப்புகள் சேதம்!

images 8
images 8

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா படல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அத்தோட்டத்திலுள்ள 23 தொடர் மற்றும் தனிகுடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15ம் இலக்க தொடர் குடியிருப்பின் கூரை காற்றினால் அள்ளுண்டு சென்றுள்ளன இதனால் இந்த குடியிருப்பில் 16 வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கூரைத்தகடுகளும் சேதமடைந்துள்ளன.

இதே நேரம் குறித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் வீழ்ந்ததன் காரணமாக வீடொன்றின் ஒரு பகுதி முற்றாகசேதமடைந்துள்ளதுடன் மேலும் இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகளும் சேதமடைந்துள்ளன.

இதே பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடிக் குடியிருப்பில் ஒரு சில வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன.

இப்பகுதியில் மேலும் பல மரங்கள் மினி சூறாவளியினால் முறிந்து வீழ்ந்துள்ளன. மரங்கள் மின் கம்பிகள் மீது வீழ்ந்து மின் கம்பிகள் சேதமடைந்ததனால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி இன்று (08) காலை சமுகம் தந்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்து மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஆவன செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.