கிரான் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

S6700156
S6700156

மட்டக்களப்பு வாகநேரி நீர்ப்பாசன திட்டத்திற்கான சிறுபோக விவசாய ஆரம்ப கூட்டம் விவசாயிகளின் பங்களிப்பின்றி அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் நடைபெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தலைமையில் கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாத்திரம் பங்கேற்ற போதிலும் விவசாயிகள் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை விவசாயிகள் கிரான் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி கூட்டம் நடைபெற்ற வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கை குறித்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

விவசாய நிலத்தை பாலைவனம் ஆக்காதே, அரச அதிகாரிகள் மணல் கொள்ளையர்களுக்கு துணை போகதே, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, வாங்காதே வாங்காதே லஞ்சம் வாங்காதே, அபிவிருத்தி குழு தீர்மானத்தை நிறைவேற்று, கிரான் பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்று என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

தமது கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டத்தினை பஸ்கரிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந் நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு பிரதேச செயலாளர் ஆதரவு வழங்குவதாகவும் இதனால் மணல் அகழ்வாளர்கள் வயல் பிரதேசம், பாதைகள் மற்றும் நீரோடைகளில் மணல் அகழ்வதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் அதிகாரிகள் மாத்திரம் கூட்டத்தில் பங்கு கொண்டு நெல் வேளாண்மை செய்கை தொடர்பான பல்வேறு தீர்மானங்களை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இக் கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர் கலந்து கொண்ட போதிலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு சரியான தொரு தீர்வு வழங்கவில்லையென விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபுவை தொடர்பு கொண்டு கேட்டபோது தன் மீது முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தற்போது ஆட்சியிலுள்ள அரசு லஞ்சமோ அரச துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டால் அதிகாரிகளுக்கு எவ்வாறான நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெரிந்த விடயமாகும்.

சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்துவது ஒரு குழுச் செயற்பாடகவே அமையும். இதற்கு விவசாய அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மண் அனுமதி பத்திரத்திற்கு சிபார்சு செய்யும் அதிகாரமே தமக்கு உள்ளதாகவும் அனுமதி வழங்கும் அதிகாரம் புவிச்சரிதவியல் சுரங்கங்கள் அமைப்பிற்கே உண்டு, பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் மன் அகழ்வு அனுமதியை நிறுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடவடிக்கைக்காக புவிசரிதவியல் திணைக்களத்தின் கவனத்திற்கு சமர்பித்துள்ளதாகவும், மேற்குறித்த செயற்பாட்டில் விவசாயிகளோ பொதுமக்களோ தன் மீது சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.