இந்திய உயர்ஸ்தானிகர் எங்களை சந்திக்காமல் சென்றது ஏன்?- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை

VideoCapture 20210312 124405
VideoCapture 20210312 124405

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், நீதி வேண்டி தொடர் போராட்டம் ஈடுபடும் தங்களை சந்திக்காமல் சென்றது ஏன் என போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 13வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கலே மரியாதை நிமித்தமாக நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்திருந்தார்.

சந்திப்பினை முடிந்து திரும்பும் வழியில், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோரால் கோஷங்கள் எழுப்பப்பட்ட போதிலும் போராட்டத்தில் ஈடுபடுவோரை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்காமலேயே சென்றிருந்தார்.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தின் கோரிக்கைகளாவன…

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைது குறித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.