கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் கமநலசேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மற்றும் மண்அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் (12-03-2021) பகல் கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதிக்கு கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் கமநலசேவை நிலையத்தின் உத்தியோகத்தர்கள் களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளரது வயல் காணியில் அவரது முழுமையான ஒத்துழைப்புடன் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தடுக்க முற்பட்ட கமநலசேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் மீது சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், டிப்பர் வாகனத்தினாலும் அடிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த ஒரு பயிர் செய்கை நிலத்தில் எந்தவித அனுமதிகளுமின்றி கனரக வாகனம், டிப்பர் வாகனம், கப்ரக வாகனம் என்பன சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டமை தொடர்பிலும் கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்று (12-03-2021) பிற்பகல் பெரும்பாக உத்தியோகத்தரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து குறித்த அதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திணைக்கள உயரதிகரிகளுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான பெரும்பாக உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.