மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை நீக்கம்

download 1 21
download 1 21


முன்னாள் சட்டமா அதிபரும் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தாம் தொடர்ந்துள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க ஶ்ரீ ராகலவிற்கு அறிவித்துள்ளது.

குறித்த குற்றப்பத்திரிகையில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜராகிய உதவி பணிப்பாளர் நாயகம் சுஹாஷினி சேனாநாயக்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக செயற்பட்ட, தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் எ.எச் எம்.டி.நவாஸ் மற்றும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான எம்.எம்.சி.பெர்டினாண்டோ ஆகியோர் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்.

வழக்கு தொடரப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், வழக்கை முன்கொண்டு செல்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு, நேற்று (15) உயர் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜராகிய அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தினால் நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு இதுவரை நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காத நிலையில், வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.