வவுனியாவில் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் காணப்படும் பொருளாதார மத்திய நிலையத்தினை விவசாய அமைப்புகளின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
இன்று வவுனியாவில் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கூட்டம் விவசாய அமைச்சரின் பங்கேற்புடன் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என அரசாங்க அதிபரிடம் தெரிவித்ததன் பின்னர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதார மத்திய நிலையத்திற்காக முன்னர் கோரப்பட்ட கேள்வி பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. அவற்றை விவசாய அமைப்புகளுக்கு வழங்குங்கள். முதலாளிகளுக்கு வழங்கப்படக்கூடாது.
விவசாய அமைப்புக்களே அவற்றை நடத்த வேண்டும். அதனூடாக விவசாய அமைப்புக்களை கொழும்பு போன்ற ஏனைய பொருளாதார நிலையங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி வியாபாரத்தினை மேற்கொள்ளவும் வழிவகை செய்ய ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
இதன்போது வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தினை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.