அரசின் அலட்சியப்போக்கால் இலங்கை மீது புதிய தீர்மானம் – அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டு

625.500.560.350.160.300.053.800.900.160.90 21
625.500.560.350.160.300.053.800.900.160.90 21

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதி செய்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ருவிட்டர் தகவல் ஒன்றைப் பதிவுசெய்துள்ள அமெரிக்கத் தூதுவர், ஐ.நாவின் புதிய தீர்மானம் நீதி வழங்குவதிலும் பொறுப்புக்கூறலிலும் இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவ்வாறே, இலங்கை அரசின் கடந்தகால ஆணைக்குழுக்களின் வாக்குறுதிகளும் பரிந்துரைகளும் நிறைவேற்றப்படாமல் போய்விட்டன என்பதையும் இந்தத் தீர்மானம் அங்கீகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை உறுதியான, அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கிய ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், கடந்த காலத்தின் வலி மிகுந்த விடயங்களுக்குத் தீர்வு காணவேண்டும் என்றும், எல்லாப் பிரஜைகளினதும் உரிமைகளை உறுதிசெய்யவும் வேண்டும் என்றும் அலெய்னா டெப்லிட்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐ.நா. தீர்மானத்துக்கான இணை அனுசரணை நாடு என்ற அடிப்படையில், இலங்கையின் நீண்டகால அமைதி மற்றும் சுபீட்சத்துக்காக அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.