அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் தனியாகப் போட்டியிடக் கலந்துரையாடலை நடத்தியுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியில் அதன் நிறுவுநர் பஸில் ராஜபக்சவின் குழுவுக்கும், அமைச்சர் விமல் வீரவன்சவின் குழுவுக்கும் இடையிலான உறவுகள் வலுவிழந்த பின்னணியில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய உறுப்பினர் ஒருவர், “இதன் நன்மை தீமைகளைக் கவனமாக மதிப்பிட்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.
தற்போது, தேசிய சுதந்திர முன்னணியில் 6 பேர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளனர். அவர்கள் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கட்சியின் பிரசாரத்தை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.