கறுவாவினால் தயாரிக்கப்பட்ட சிகரட்டுக்கு, ஆயுர்வேத திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சதுர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சிகரட்டை தயாரித்த நிறுவனம், அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள, ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இலங்கையில் கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரட்டை, அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 17 ஆம் திகதி அறிமுகப்படுத்தியிருந்தார்.
நாட்டின் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிகரட், புகைத்தலுக்கு அடிமையாகும் நபர்களுக்கு மாற்றீடாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, கறுவாவின் ஊடாக ஏற்படும் புகை, பாதிப்பை ஏற்படுத்தாது என இதுவரை கண்டுடிபிக்கப்படவில்லை என விசேட வைத்தியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
அத்துடன், இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற பின்னணியிலேயே, ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.