யாழில் செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவு சங்கங்களை மீள செயற்படுத்த நடவடிக்கை – மகேசன்

20210325 124950
20210325 124950

யாழ் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவு சங்கங்களை மீள செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்றையதினம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய விவசாய குழு கூட்டத்தில் மாவட்ட கமநல சேவைகள் பணிப்பாளர், மாகாண விவசாய பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், விதை உற்பத்தி திணைக்கள அதிகாரிகள், விதை உற்பத்தி நிலைய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்..

மாவட்ட விவசாயிகள் மாவட்ட பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அதேநேரத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக மாகாண விவசாய திணைக்களம் ஊடாக, மற்றும் மிருக வைத்திய திணைக்களத்தின் ஊடாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், சில மானியத் திட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

விவசாய அமைச்சு அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகின்றது.

குறிப்பாக கிராமத்திலே 75 சதவீதமான மக்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்களுடைய மனை பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்குரிய அரசாங்கத்தினுடைய கொள்கையின் அடிப்படையில் பல்வேறுபட்ட மானியத்திட்டங்கள் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வங்கிகளுக்கு ஊடாகவும் பல்வேறுபட்ட இலகு கடன்கள், வட்டி குறைந்த அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விவசாயிகளுக்கு விளங்க படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விவசாயிகளுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாகிய கட்டாக்காலி மாடுகள் ,விவசாய நிலங்கள் நிரப்பப்படுதல், அதேபோல விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்தல் கட்டிடங்கள் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இன்றையதினம் ஆராயப்பட்டது. அதற்கு விவசாய கமநலசேவை திணைக்களமும் பிரதேச செயலாளர்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு இணைந்து விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

கடந்த போகத்தில் பெரும் போகத்தின் போதும் விவசாயிகள் எதிர்கொண்ட நட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது அதே நேரத்தில் அவர்களுக்குரிய தொழில்நுட்ப உதவிகள் மற்றும் கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் நடவடிக்கைகள் விவசாயிகளை சென்று சேர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அரசாங்கத்தினால் ,விவசாய அமைச்சினால் அமுல்படுத்த படுகின்ற பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற வேண்டும் .அதே நேரத்தில் ஏற்கனவே இயங்கி தற்போது செயல்பாட்டில் இல்லாத சில விவசாய கூட்டுறவு சங்கங்களையும் அவற்றைச் ஏற்படுத்தி அந்த சங்கங்கள் ஊடாக பயன்கள் யாவும் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய குழு கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அதற்கு பொறுப்பான திணைக்களங்களங்கள் செயற்பாட்டினை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் இன்றுவரை தேசிய உர நிலைய அலுவலகம் ஒன்று இயங்காத நிலை காணப்பட்டது மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட விவசாய அமைச்சரின் கோரிக்கைக்கிணங்க அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவே யாழ் மாவட்ட செயலகத்தில் அந்த அலுவலகம் இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.