ஹொரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

prison
prison

வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை மாலை ஹொரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை காவல்துறையினருடன் இணைந்து நாவலடி இராணுவ சோதனை சாவடியில் வைத்து கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்தில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது 5020 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் காத்தான்குடியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே நாவலடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை காவல்துறை பிரிவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் வாழைச்சேனை இராணுவ புலனாய்வுப் பிரிவினர், வாழைச்சேனை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தில் போதை வியாபாரத்தையும், பாவனையையும் இல்லாதொழிக்கும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர், விஷேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் செயற்பாட்டுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.