கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு இலங்கை போக்குவரத்து பேருந்து வண்டியில் ஹெரோயின் போதை பொருள் கடத்திய பிரயாணி ஒருவரை மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (25) மாலை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 5 கிராம் 20 மில்லிகிராம் போதைப்பொருளை மீட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகல் ஒன்றுக்கமைய சம்பவதினமான இன்று மாலை வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து பேருந்து வண்டியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 5 கிராம் 20 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் அவரை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.