நானாட்டான்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் மண் அகழ்விற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களை நேரடியாக சென்று ஆராய்வு!

4 6
4 6

நானாட்டான் மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் மண் அகழ்விற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் உரிய திணைக்களங்கள் இணைந்து கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இன்று காலை 7.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை குறித்த கள விஜயம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நானாட்டான் பிரதேச செயலாளர் கிரிஸ்கந்தகுமார், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் ,புவி சரீதவியல் திணைக்களம், முருங்கன் காவல்துறையினர் ,விசேட அதிரடிப்படை, இராணுவம், நீர்ப்பாசன திணைக்களம், மாவட்டச் செயலக காணி திட்டமிடல் பிரிவு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கம நல சேவைகள் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் இணைந்து குறித்த கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தேக்கம் மற்றும் கட்டையடம்பன் ஆகிய இரு பகுதியிலும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் இசைமால தாழ்வு பகுதியில் உள்ள தேத்தாக்குழி , கற்கடந்த குளம் பகுதியில் உள்ள பண்டிதன் கட்டு பகுதியில் இரு இடங்களையும், ஆத்தி மோட்டை பகுதியில் மூன்று இடங்களிலும், அடி ஆச்சி குளம் பகுதியில் 3 இடங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

நாளைய தினம் சனிக்கிழமை(27) மன்னார் தீவு பகுதியில் அடையாளம் காணப்பட்ட இடங்கள் நேராயாக குறித்த குழுவினரினால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு இடங்கள் பார்வையிட்ட பின்னர் எதிர் வரும் 30 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் மண் அகழ்வு செய்யப்பட உள்ள இடங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.