அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழாவில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளையும், சேவையிலிருந்து ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களையும் பதவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர்களையும், பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வானது இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாரக் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்கஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன், ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் மாணவிகளின் கண்கவர் நடனங்கள் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கடந்த 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்த தொழிற்சங்க உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் முதலானோர் பாராட்டி, பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் “முகை” விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், அதன் முதல் பிரதிகள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்கஆகியோர் சங்கத்தின் தலைவர், செயலாளர் நாயகம் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட மீயுயர்பீட உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் தொழிற்சங்கத்தின் உயர் பீட உறுப்பினர்ககள், தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.