வவுனியா கணேசபுரம் கிராமத்தின் பிரதான வீதி அபிவிருத்தி பணி இன்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தானால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி புனரமைப்பின் ஒரு கட்டமாக கணேசபுரத்தில் இரண்டு கிலோ மீற்றர் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளவுள்ள இப் புனரமைப்பு பணி 58.2 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
இவ் ஆரம்ப நிகழ்வில் வன்னிப்நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர், கிராமத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்,
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களிற்கு மட்டுமல்லாமல் கிராமங்களிற்கு கூட போக முடியாதநிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கடந்த அரசாங்கத்தின் செயல்திட்டங்களில் இதுவும் ஒன்றாகி போய்விட்டது. நான் யார் மீதும் பிழை சொல்ல விரும்பவில்லை என்றாலும் கூட மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர்.
கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட வீடுகளிற்கான நிதிகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். குறிப்பாக இது தொடர்பாக குறித்த இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடிய போது வீடுகளை வழங்கிய போது தெரிவுகளில் ஏற்பட்ட பிழைகளினாலேயே இதற்கான நிதிகள் தாமதமாவதாக தெரிவித்திருந்தார். இருந்தாலும் கூட விரைவாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு குழு ஒன்றினை அனுப்பி பயனாளிகள் தெரிவுகளில் பிழைகள் இருந்தால் அவர்களை முதலில் நீக்கி மற்றையவர்களிற்காவது நிதிகளை வழங்குமாறு அமைச்சரிடம் கேட்டதன் அடிப்படையில் அதனை செய்து தருவதாக தெரிவித்திருந்தார்.
சில பகுதிகளில் வீடு உள்ளவர்களிற்கு வீடு வழங்கப்பட்டுள்ளது என்றாலும் கூட எமது பகுதிகளில் அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். அவ்வாறு வழங்கப்பட்டிருப்பின் அவர்களிற்கு கிடைக்கப்பெறாது ஆனால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களிற்கு கட்டாயம் கிடைக்கும். அரசபிரதிநிதிகள் என்ற ரீதியிலும் எமது தலைவர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர் அபிவிருத்தியை நோக்காக கொண்டவர்களாகும். குறிப்பாக கடந்த காலத்தில் எமது பிரமரின் ஆட்சிக்காலத்தில் தான் யுத்தத்தின் பின்னர் இப்பகுதிகளிற்கான பிரதான வீதிகள் பிரதான வேலைத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தது.
அதன் பின்னர் 2015ம் ஆண்டுக்கு பின்னர் பாரிய வேலைத்திட்டம் என்ன அந்த நல்லாட்சியில் நானும் சிறிய காலம் இருந்தவன் தான் என்றாலும் அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தாமையாலேயே அதிலிருந்து ஒதுங்கினோம். தேர்தல் என்று வருகின்ற போது எமது மக்கள் ஏதோவொரு அடிப்படையில் அபிவிருத்தி செய்கின்ற தலைவர்களை தெரிவு செய்வதில் குழம்பி போகின்றனர். இந்த நாடானது பல் சமூகங்கள், பல இனங்கள் வாழ்கின்ற நாட்டில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.
எந்த அரசாங்கத்திலும், எந்த தலைவர்களிடத்திலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இவற்றிற்கு உடனே தீர்வு கிடைக்கும் என்று இல்லை. ஆனால் எமது பகுதிகளிகளின் தேவைகள், அபிவிருத்திகளை செய்வதற்கு யாருடன் இருக்க வேண்டுமோ அதனை நாங்கள் தெரிவு செய்தோம். அதற்கான ஆணையாக நீங்கள் என்னை இரண்டாவது முறையும் நாடாளுமன்றம் செல்வதற்குரிய வாக்குகளை தந்திருக்கின்றீர்கள்.
நாங்கள் இரு பிரதான கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஒன்று வீதிகள் மறு சீரமைப்பு மற்றையது குளங்கள் புனரமைப்பாகும். இவ்விரண்டும் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனால் எமது பாரிய நன்மையை பெறுகின்றது.
வனவளத்திணைக்களத்தின் கீழ் உள்ள அரச காணிகளை விடுவிப்பதற்கான வர்த்தகமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். இவ்வாறானவை வரும் போது எமது மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.தேர்தல் காலங்களில் சிலர் வருகை தந்து குழப்புவார்கள். ஆனால் அக்காலப்பகுதியில் நீங்கள் நிதானமாக செயற்பட்டு யார் உங்களது பகுதிகளில் அபிவிருத்தியை முன்னெடத்துள்ளார்களோ அதன் அடிப்படையில் நீங்கள் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். எமது தலைவர்கள் மத்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களிற்கு மத்தியில்தான் எங்களிற்கு நிதியை ஒதுக்குகின்றார் என தெரிவித்தார்