சுதந்திரபுரத்திலுள்ள தனது காணியினை அரசிடம் கையளித்த ஆனந்தசங்கரி

IMG 20210401 111201
IMG 20210401 111201

சுதந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை அரசிடம் கையளிக்கும் பத்திரத்தில் வீ.ஆனந்தசங்கரி ஒப்பமிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வீ.ஆனந்தசங்கரிக்கு 15 ஏக்கர் மத்தியவகுப்பு காணியாக இருந்தது. குறித்த காணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்து வந்த நிலையில் அக்காணியை தமக்கே பகிர்ந்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்குமாறு ஆனந்தசங்கரி எழுத்துமூலமான கோரிக்கையை பிரதேச செயலாளர் மற்றம் அரசாங்க அதிபரிடம் முன்வைத்தார். கொவிட் பரவல் காரணமாக குறித்த நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வந்த நிலையில் அக்காணியை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஆனந்தசங்கரியின் இல்லத்திற்கு சென்ற பிரதேச செயலக காணி அலுவலக உத்தியோகத்தர்கள் பகிர்ந்தளிப்பு செய்வது தொடர்பில் பேசியிருந்ததுடன், மத்திய வகுப்பு காணியை அரசாங்கத்திடம் பாரமளிப்பதற்கான ஆவணத்தினையும் வழங்கியிருந்தனர்.

குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்ட ஆனந்தசங்கரி, அவற்றை உரிய முறையில் மக்களிற்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். குறித்த காணிகள் அரச காணியாக்கப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் காணியற்ற மக்களிற்கு பகிர்நதளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், 3 மாத கால அவகாசத்திற்குள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

குறித்த காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி, மத்தியவகுப்பு காணி என்பதற்காக வீட்டுத்திட்டங்களை இழந்து நிற்கும் மக்களிற்கு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், இயலுமானவரை மக்களின் கரங்களிற்கு குறித்த காணி விரைவாக கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறும் வினயமான கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.