முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் வழங்க தீர்மானம் – நாமல்

ராஜபக் ஷ
ராஜபக் ஷ

முன்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் ஒன்றினை வழங்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டதின் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கருத்துகளை தெரிவிக்கும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அவர், எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி இலங்கையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்களை ஒருங்கிணைத்ததாக மாபெரும் தொழிற்சந்தை ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.