மணல் கொள்ளையினால் வடக்கின் சூழலுக்கு பேராபத்து!!

PHOTO
PHOTO

வடக்கில் கட்டுப்பாடற்ற முறையில் மணல்வளம் சுரண்டப்படுவதால் விரைவில் மணல் வளத்துக்குப் பற்றாக்குறைவு ஏற்படவுள்ளதோடு, வடக்கின் சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து நிகழவுள்ளது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

மணற்குன்றுகளின் உயரம் குறையக்குறைய நிலத்தின் கீழே நன்னீர் வில்லையின் தடிப்புக் குறைந்து, அவ்விடத்தைக் கடல்நீர் ஆக்கிரமிக்கின்றது. மண்கும்பான் என்ற நன்னீர் கிராமம் இன்று குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியிருப்பதன் பின்னணி இதுதான். மண்கும்பானில் மணல் ஏற்றிய உழவூர்திக்குத் தீ வைக்கும் அளவிற்கு கடலோரக் கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிவிருத்தியில் ஏற்படும் தாமதங்களையோ அல்லது வேறு காரணங்களையோ அடிப்படையாகக்கொண்டு அரசாங்கம் வழித்தட அனுமதியைத் தேவையற்றதாக்கும் முடிவை எடுத்திருக்கலாம். இம்முடிவு தென் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாகவும் இருக்கலாம்.

ஆனால் இவை நிலத்தடி நீரை உயிர் ஆதாரமாகக்கொண்ட வடக்கின் சுற்றுச் சூழலுக்கும், வடக்கின் நிலைத்த அபிவிருத்திக்கும் இம்முடிவு எவ்வகையிலும் பொருத்தம் அற்றதாகும்.

நடைமுறையில் இருக்கும் மணல் அகழ்வுக்கான அனுமதியினால் மட்டும் மணற்கொள்ளையையோ அதன் காரணமாக ஏற்படவுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளையோ ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.

மணற்கொள்ளையினால் சுற்றுச்சூழலில் ஏற்படவுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் வழித்தட அனுமதி நீக்கத்தினால் வடக்குக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை அரசுக்கு எடுத்து சொல்லி மீளவும் அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு உடனடியாக ஆவன செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.