யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 760 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 26 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணத்தில் 24 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாண சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 14 நாட்களின் பின் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே அவர்களுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
கிளிநொச்சி கண்டாவளை, முல்லைத்தீவு ஆகிய இரு இடங்களில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.