வவுனியா நகரில் கொரோனா தொற்று வைரஸிலிருந்து பாதுகாக்கும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினருடன் இணைந்து வவுனியா காவற்துறையினர் முன்னெடுத்திருந்தனர்.
தமிழ் சிங்கள புத்தாண்டு எதிர்வரும் சில நாட்களில் வரவுள்ள நிலையில் வவுனியா நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக கொரோனா தொற்று வைரஸ் பரவும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு வவுனியா சுகாதார பிரிவினருடன் இணைந்து காவற்துறையினர் திடீர் நடவடிக்கை ஒன்றினை இன்று (10.04) வவுனியா தர்மலிங்கம் வீதி சந்தியில் முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது சீரான முறையில் முகக்கவசம் அணியாமை, முகக்கவசமின்றி நடமாடிய நபர்கள் ஆகியோரை மறித்து அவர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினை பதிவு மேற்கொண்டதுடன் சுகாதார பிரிவு காரியாலயத்திற்கு சமூகமளிக்குமாறு உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது 80 க்கு மேற்பட்ட நபர்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான திடீர் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுமென சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.