நாடு முழுவதும் இன்று முதல் எழுமாறாக பி.சி.ஆர்.! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் எல்லைகளில் மட்டுமன்றி நாடு முழுவதும் இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

எனவே, அனைத்து மக்களும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அமுல்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது நாளாந்தம் சுமார் 200 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்றும் கூறினார்.

இதேவேளை, நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள் என்பதால் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.