சிவமயம் மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்’ வாசகம் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் தீயிட்டு கொழுத்தப்பட்டமை மற்றும் சங்க நிர்வாக தெரிவு தொடர்பில் இளைஞர்கள் கடும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
வவுனியாவில் இயங்கி வரும் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நிர்வாக தெரிவு சங்கத்தின் நடராஜர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது பல வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன் கைகலப்பு ஏற்படும் நிலையும் காணப்பட்டது.
இதற்கும் மேலாக ஆண்டு கணக்கறிக்கையில் ‘சிவமயம் மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்’ என ஆரம்பிக்கும் பதில் தலைவரின் அறிக்கை நடராஜர் மண்டபத்தில் வைத்து தீயிட்டு கொழுத்தப்பட்டது தொடர்பிலும் இளைஞர்கள் மத்தியிலும், இந்துக்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இதேவேளை குறித்த சங்க பொதுக்கூட்டத்திற்கும் 15 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டபோதிலும் இளைஞர்கள் எவரும் நிர்வாகத்திற்கும் தெரிவு செய்யப்படாமை தொடர்பிலும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக தமது விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தொடர்ச்சியாக குறித்த சங்கத்தில் முரண்பாடான நிலை காணப்பட்டு வருகின்றமையால் இந்து கலாசார திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.