வவுனியா சுத்தானந்தா இந்துஇளைஞர் சங்கத்தின் பதில்தலைவரால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டமை சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் உபதலைவரும்,
வவுனியாநகரசபை உறுப்பினருமான பிரபாகரன் யாணுஜன் விசனம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் நிர்வாகத்தெரிவுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது பதில் தலைவரால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் “உ சிவமயம்
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” என்ற இந்துக்களின் முக்கிய கோட்பாடு அடங்கிய சொற்றொடர் பொறிக்கப்பட்டிருந்தது.
அதனை பொருட்படுத்தாமல் அந்த அறிக்கை எரிக்கப்பட்டமை சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாக இருப்பதுடன், மன்னிக்க முடியாத குற்றமே. ஒரு பிரபலமான இந்து அமைப்பின் உபதலைவர் பொறுப்பினை வகித்தவர் இப்படியான செயலை முன்னெடுத்தமையை ஒருபோதும் ஏற்கமுடியாது.
சமூகத்திற்கும், சமயத்திற்கும் வழிகாட்டி என தங்களை கூறிக்கொள்பவர்கள் ஆணவத்தை கைவிட்டு பக்குவமனோநிலையுடன் பணிசெய்யவேண்டும். இதன்போதே சமயமும், சமூகமும் வளர்சியடையும்.
எனவே இந்த பாதகசெயலை செய்தவர் இந்துமக்களிடம் மன்னிப்புக்கேட்பதுடன், இந்து இளைஞர் சங்கத்தின் உபதலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகிக்கொள்ளவேண்டும் என்பதே இந்து மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
அத்துடன் இந்து இளைஞர் சங்கம் என்று பெயரளவில் மாத்திரமே இருப்பதுடன் இளைஞர்கள் எவரும் அதில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படாமை பலகாலங்களாக நீடித்து வருகின்றது. எனவே இனிவரும் காலங்களிலாவது அதன் நிர்வாகப் பொறுப்புக்களில் இளைஞர்களை உள்ளீர்க்கும் படியாக அதன் யாப்புவிதிமுறைகள் சீர்செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.