தந்தையை கொலைசெய்த மகன்!

StrangulationWRC 21
StrangulationWRC 21

நாட்டின் மூன்று வேறுபட்ட பகுதிகளில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்தில் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதுடன்,இதன்போது பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நாட்டின் மூன்று வேறுபட்ட பகுதிகளான திஸ்ஸமஹாராம,பொத்துஹர மற்றும் இதோகம ஆகிய பகுதிகளில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பொத்துஹெர காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரக்கல பகுதியில் மகனொருவர் அவரது தந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், 41 வயதுடைய சந்தேக நபரான மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திஸ்ஸமஹாராம சந்தகிரிகம பகுதியில் நபரொருவர் பெண்ணொருவரை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

சம்பவத்தில் 48 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபர் குறித்த பெண்ணின் கள்ள காதலர் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இதோகம பகுதியில் இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது , நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் சந்தேக நபரின் மனைவியிடம் கள்ள தொடர்புகளை பேணியுள்ளதாகவும், இதன்காரணமாகவே இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.