சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆமைகள் கண்டுபிடிப்பு

227619
227619

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆமை இனம் ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

சிவப்பு மார்பகத்தை கொண்டுள்ள குறித்த ஆமை இனம், அமெரிக்காவில் இருந்து மீன் இறக்குமதியாளர்களால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இந்த ஆமை இனம் நாட்டில் உள்ள பூர்வீக தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என விலங்கு ஆராய்ச்சி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த ஆமை இனம் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் தொடர்பிலான ஆய்வாளரான கலாநிதி என்சலம்டி சில்வா, வனவிலங்கு திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

வீடுகளில் வளர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள குறித்த ஆமைகள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைவிடப்பட்டுள்ளன.

இந்த ஆமைகள், இலங்கையில் உள்ள சாதாரண ஆமைகளை விட அதிகளவான உணவுகளை உட்கொள்ளக்கூடியது.

எனவே நீர்நிலைகளில் வாழும் மீன்கள் அவற்றின் முட்டைகள் மற்றும் தாவரங்களை இந்த ஆமைகள் அதிகளவில் உண்ணக்கூடும்.

எனவே எமது சுற்றுச்சூழலுக்கு இவை பெரும் சவாலாக மாறக்கூடும்.

சிவப்பு மார்பகத்தை கொண்டுள்ள குறித்த ஆமைகள், ஐரோப்பிய நாடுகளில் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர் என்சலம்டி சில்வா, சுட்டிக்காட்டியுள்ளார்.