வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டியேற்படும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சில நாடுகளில் தற்போது கொவிட் பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் நாட்டில் கொவிட்-19 பரவல் அச்சுறுத்தல் காணப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதேவேளை வெள்ளிக்கிழமை இனங்காணப்பட்ட 237 தொற்றாளர்களில் 78 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உள்ளடங்குவதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் அலை ஆரம்பமானதன் பின்னர் நாளாந்தம் சுமார் 400 – 600 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
எனினும் தற்போது அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு அலை உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதால் மக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று தொற்று நோய் பிரிவு அறிவுறுத்தியுள்ளது