சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டினை பயன்படுத்தி துபாய் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டியை சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் இன்று(21) அதிகாலை 3.15 துபாய் நோக்கி புறப்படவிருந்த நிலையில் இவரது ஆவணங்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் விமான சேவை அதிகாரிகள் அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகளையடுத்து சந்தேகநபரான யுவதி சமர்ப்பித்த ஆவணங்கள் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அவரிடமிருந்த பையை சோதனையிட்டபோது, அதிலிருந்து செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.