அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது – ஹெக்டர் அப்புஹாமி

avatar
avatar

அரசாங்கத்தினால் தற்போது சமூக ஊடகங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எதிர்காலத்தில் பிரதான ஊடகங்களுக்கும் ஏற்படும். ஊடகங்களை மாத்திரமின்றி மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகளின் குரலையும் முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் உரையாற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தல்விடுக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து கடந்த காலங்களில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம்.

இதேவேளை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களை கேள்விக்குள்ளாக்கி , நீதித்துறை சுயாதீனத்தை கேள்விக்குறியுள்ளாக்கியுள்ளனர். அத்தோடு நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வியெழுப்புவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதமாகும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு எதிராகவும் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடளிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தினுள் பாதுகாப்பு இல்லாமலாக்கப்படும் போது , மக்களின் பாதுகாப்பிற்கு எவ்வாறு உத்தரவாதமளிப்பது? தற்போது சமூக ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் எதிர்வரும் காலங்களில் பிரதான ஊடகங்களுக்கும் ஏற்படும். இவ்வாறு எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் , உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு இலட்சக்கணக்கான ஹரின் பெர்னாண்டோக்களை உருவாக்க நாம் தயாராகவுள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கமே புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தியதாகவும் , தாம் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் அதனை ஸ்திரப்படுத்துவதாகவும் கூறினர். ஆனால் அதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.

இவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவர்களுக்கு எதிராக சி.ஐ.டி.யில் முறைப்பாடளிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதமாகும். இந்த விதிமுறைகளை மீறி சி.ஐ.டி. யால் அழைப்பு விடுக்க முடியாது என்றார்.