நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை-ஆளுநர்

IMG20210427143411 01
IMG20210427143411 01

சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.


வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று (27) காலை இடம்பெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நேற்றைய அறிக்கையின் படி கொவிட் பரம்பல் வடக்கில் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்க அதிபர்களூடாக மீளாய்வுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளும் அவற்றை மீறுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படியும் அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

அத்துடன் வவுனியாவில் சௌபாக்கியா மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் நல்ல முறையிலேயே இடம்பெற்று வருகின்றது. வீடமைப்பு திட்டங்கள் மற்றும் மக்களின் காணிப்பிரச்சனைகள், சுகாதாரத்துறை சார்ந்த விடயங்கள் போன்றன இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. சுகாதாரத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளிற்காக நிதி ஒதுக்கீடுகள் எமக்கு கிடைத்துள்ளது. மருத்துவ துறைசார்ந்த வெற்றிடங்களும் இங்கு இருக்கிறது. இவற்றை தீர்ப்பதற்காக தொடர்ந்து சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளேன். தற்போது ஆரம்பசுகாதார நிலையங்களை புனரமைப்பதற்காக 500 மில்லியன் வடமாகணத்திற்கு கிடைத்துள்ளது. அதனூடாக அவற்றை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். 

வவுனியா மாவட்டத்தின் பேராறு நீர்த்தேக்கத்தில் அதன் விஸ்தரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் செட்டிகுளம், நெடுங்கேணியிலும் நீர்த்தேக்க திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமான நீர்தேங்கங்களை அமைப்பதற்கான நிதியினை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அடுத்த வாரமளவில் அந்த நிதி எமக்கு கிடைக்கும் .

பாதிக்கப்பட்டவர்களிற்கான வீடுகளை அமைப்பதற்கு 100 மில்லியனை ஒதுக்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது. விசேடமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான வீடுகளை மாகாணசபை நேரடியாகவே முன்னெடுக்கும் என்றார்